இலை;
!
இன்றோ... நாளையோ...
இப்போதோ... பிறகோ...
விழுந்து விடுவேன்
உயிரின் கடைசி இழையில்
ஊசலாடி நிற்கிறேன்
உரசும் காற்று
உணர்ச்சிவசப்பட்டாலோ
முத்துமழைத் துளியொன்று
மூக்கில் விழுந்தாலோ
என் கிளையில் ஒரு பறவை
சிவ்வென்றமர்ந்து சிறகடிக்கும் அதிர்ச்சியிலோ
நான் விழுந்துவிடுவேன்
விடை கொடு கிளையே
விடை கொடு
இருந்தவரை என்மீது
எத்தனை குற்றச்சாட்டு
காற்றின்
தப்புத் தப்பான பாடலுக்கும்
தலையாட்டுவேனாம்
எச்சமிடவரும் பட்சிகளுக்கும்
பச்சைக்கொடி காட்டுவேனாம்
பக்கத்து இலைகளோடு
ஒவ்வொரு பொழுதும் உரசல்தானாம்
இதோ
சாவை முன்னிட்டு என்னை
மன்னித்துவிட்டன சக இலைகள்
அப்படியாயின்
வாழ்வு குறைகுடமா?
மரணமே பூரணமா?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கூப்பிடு தூரத்தில் வாழ்க்கை;
!
தற்கொலை புரியப்போய்
மரணம் மறுதலிக்க
வாழ்க்கைக்குள் மீண்டும்
துப்பப்பட்டவனே
சொல்
பேய்களின் விருந்துமண்டபமாய்
மனசு உனக்கு மாறியதெப்படி?
மூளையில் எப்போது
முள்முளைத்து உனக்கு?
மரணத்தின் கர்ப்பப்பையில்
கலைந்து போனவனே
நீ
செத்திருந்தால்
ஊர் அழுதிருக்கும்
சாகவில்லை
நீயே அழுகிறாய்
கைக்குட்டை இந்தா
கண்களைத் துடை
உயிரின் உன்னதம்
தெரியுமா உனக்கு?
மனிதராசியின்
மகத்துவம் தெரியுமா?
உயிர் என்பது
ஒருதுளி விந்தின்
பிரயாணம் இல்லையப்பா
அது
பிரபஞ்சத்தின் சுருக்கம்
உன்னை அழித்தால்
பிரபஞ்சத்தின்
பிரதியை அழிக்கிறாய்
பிரபஞ்சத்தை அழிக்க
உனக்கேதப்பா உரிமை?
வாழ்க்கை உன்னை
பூமிக்கு அனுப்பியபோது
கைந்நிறையப் பூக்கள்
இப்போதென்ன...
பைந்நிறைய
சவப்பெட்டி ஆணிகள்...?
ஓ
வாழ்க்கையோடு
உடன்பாடு
மனிதரோடுதான்
முரண்பாடா?
மனிதரைக் கழித்தாலும்
பூமி மிச்சப்படுமடா பாவி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக