- 1. சங்க காலம்
- ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு
- குருகு பறக்கும் தீம்புனல் நாடன்
- கற்றை நிலவு காயும் காட்டிடை
- என்கை பற்றி இலங்குவளை ஞெகிழ்த்து
- மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து
- வாட்கண் மயங்க உண்டதை மீண்டும்
- பசலை உண்ணும் பாராய் தோழி
- * * * * *
- 2 காவிய காலம்
- பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
- மின்னல் மிடைந்த இடையென்பார் - இன்னும்
- கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில்
- கரும்பிருக்கும் என்பார் கவி.
- * * * * *
- 3 சமய காலம்
- வெண்ணிலவால் பொங்குதியோ
- விரக்தியால் பொங்குதியோ
- பெண்ணொருத்தி நான்விடுக்கும்
- பெருமூச்சாற் பொங்குதியோ
- பண்ணளந்த மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால்
- விண்ணளந்து பொங்குதியோ
- விளம்பாய் பாற்கடலே!
- * * * * *
- 4 சிற்றிலக்கியக் காலம்
- தூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள் - மனம்
- துள்ளி ஓடும்விழிக் கெண்டையாள் - நெஞ்சைத்
- தாக்கி மறுநொடியில் தவிடுபொடியாக்கும்
- சண்டையாள் - வெள்ளித் தண்டையாள்
- முலை அதிரும்படி மணி உதிரும்படி
- மனம் பதறும்படிஆடும் பாவையாள் - வில்
- மாரன் பகைமுடிக்கத் தேவையாள்
- * * * * *
- 5 தேசிய காலம்
- சின்னஞ் சிறுகமலப் பூவினாள் - என்
- சித்தத்திலே வந்து மேவினாள்
- கண்ணில் ஜோதிஒன்று காட்டினாள் - என்
- கவியில் காதல்ரசம் ஊற்றினாள்
- விண்ணில் நிலவெரியும் வேளையில் - பொன்
- வீணை கரம்கொண்டு மீட்டினாள்
- மண்ணில் விண்ணகம் காட்டியே - அவள்
- மறைந்தகதை எங்கு சொல்குவேன்?
- * * * * *
- 6 திராவிட காலம் - 1
- இல்லாத கடவுள் போன்ற
- இடைகொண்ட பெண்ணே உந்தன்
- பொல்லாத அழகு பாடப்
- பூவாடும் கூந்தல் பாட
- சல்லாப விழிகள் பாடத்
- தனித்தமிழ் கொண்டு வந்தேன்
- நில்லாமற் போனால் கூட்டில்
- நிற்குமோ எந்தன் ஆவி?
- * * * * *
- 7 திராவிட காலம் - 2
- விண் - அப்பம் போன்ற நிலவுவந்து - காதல்
- விண்ணப்பம் எழுதுகின்ற இரவு
- முத்தமென்ற சொல்போல - நான்
- இதழ்சேர வரும்போது
- உதடுஒட்டாத குறள்போல - நீ
- தள்ளியா நிற்பது?
- விடையாட வேண்டும் வாடிஎன் கண்ணே
- விடிவெள்ளி கண்ணயரும் முன்னே
- * * * * *
- 8 புதுக்கவிதைக் காலம் - 1
- ஏப்ரல் சூரியன்
- டீசல் புகை
- பேருந்து நெரிசல்
- அலுவலக எரிச்சல்
- இவையெதிலும் வாடாமல்
- பத்திரமாய் வைத்திருக்கிறேன்
- உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
- யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
- உன் கருங்கூந்தற் சிறுபூவை
- * * * * *
- 9 புதுக்கவிதைக் காலம் - 2
- உன்வீட்டு ஆன்ட்டனாவிலும்
- என்வீட்டு நைலான் கொடியிலும்
- தனித்தனியே காயும்
- நேற்று
- ஊருக்கு வெளியே நாம்
- ஒன்றாய் அழுக்குச் செய்த உள்ளாடைகள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக