- நீல மலைச்சாரல் - தென்றல்
- நெசவு நடத்துமிடம்
- ஆல மரக்கிளைமேல் - மேகம்
- அடிக்கடி தங்குமிடம்
- எந்திர ஓசைகளைக் - கழற்றி
- எங்கோ எறிந்துவிட்டு
- மந்திரம் போட்டதுபோல் - ஒரு
- மெளனம் வசிக்குமிடம்
- கட்டடக் காடுவிட்டு - நிழல்
- கனிகின்ற காடுவந்தேன்
- ஒட்டடை பிடித்தமனம் - உடனே
- உட்சுத்தம் ஆகக்கண்டேன்
- வானம் குனிவதையும் - மண்ணை
- வளைந்து தேடுவதையும்
- காணும் பொழுதிலெல்லாம் - ஒரு
- ஞானம் வளர்த்திருந்தேன்
- வெவ்வேறு காட்சிகளால் - இதயம்
- விரிவு செய்திருந்தேன்
- ஒவ்வோர் மணித்துளியாய் - என்
- உயிரில் வரவுவைத்தேன்
- * * * * *
- சிட்டுக் குருவியன்று - ஒரு
- சிநேகப் பார்வை கொண்டு
- வட்டப் பாறையின்மேல் - என்னை
- வாவென்றழைத்தது காண்
- மொத்தப் பிரபஞ்சமும் - என்
- முன்னே அசைவதுபோல்
- சித்தப் பிரமைகொண்டு - அந்தச்
- சிட்டை ரசித்திருந்தேன்
- அலகை அசைத்தபடி - அது
- ஆகாயம் கொத்தியதே
- உலகை உதறிவிட்டுச் - சற்றே
- உயரப் பறந்ததுவே
- பறக்க மனமிருந்தும் - மனிதன்
- பறக்கச் சிறகுமில்லை
- இறக்கை துடிக்கையிலே - என்
- இமைகள் துடிக்கவில்லை
- சொந்தச் சிறகுகளில் - வானைச்
- சுருட்டி எடுத்துக் கொள்ளும்
- இந்தக் குருவியினும் - மனிதன்
- எங்ஙனம் உயர்ந்துவிட்டான்?
- கீச்சுச் கீச்சென்றது - என்னைக்
- கிட்ட வாவென்றது
- பேச்சு மொழியின்றியே - என்மேல்
- பிரியமா என்றது
- * * * * *
- அறிவுக்கு விரிவுசெய்ய - மனிதர்
- ஆயிரம் மொழிகாண்பினும்
- குருவிக்கு விடையிறுக்க - ஒரு
- குறுமொழி கண்டதுண்டா?
- ஒற்றைச் சிறுகுருவி - நடத்தும்
- ஓரங்க நாடகத்திலே
- சற்றே திளைத்திருந்தேன் - காடு
- சட்டென்று இருண்டதுகாண்
- மேகம் படைதிரட்டி - வானை
- மிரட்டிப் பிடித்ததுகாண்
- வேகச் சுழற்காற்று - என்னை
- விரட்டியடித்துது காண்
- சிட்டுச் சிறுகுருவி - பறந்த
- திசையும் தெரியவில்லை
- விட்டுப் பிரிந்துவிட்டேன் - விரைந்து
- வீட்டுக்கு வந்துவிட்டேன்
- * * * * *
- வானம் தாழ்திறந்து - இந்த
- மண்ணில் வீழ்ந்ததென்ன
- காணும் திசைகளெல்லாம் - மழையில்
- கரைந்து போனதென்ன
- மின்னல் பறிக்குதென்று - சாரல்
- வீட்டில் தெறிக்குதென்று
- ஜன்னல் அடைத்துவைத்தாள் - மனைவி
- தலையும் துவட்டிவிட்டாள்
- அந்தச் சிறுகுருவி - இப்போ(து)
- அலைந்து துயர்ப்படுமோ?
- இந்த மழைசுமந்து - அதன்
- இறக்கை வலித்திடுமோ?
- * * * * *
- காட்டு மழைக்குருவி - போர்த்தக்
- கம்பளி ஏதுமில்லை
- ஓட்டை வான்மறைக்க - அதன்
- உயரே கூரையில்லை
- கூடோ சிறுபுதரோ - இலைக்
- குடைக்கீழ் ஒதுங்கிடுமோ?
- தேடோ தேடென்று - இடம்
- தேடி அலைந்திடுமோ?
- பெய்யோ பெய்யென்று - மழை
- பெய்தால் என்ன செய்யும்
- அய்யோ பாவமென்று - குருவி
- அழுவதை நினைத்திருந்தேன்
- * * * * *
- காட்டில் அந்நேரம் - நிகழ்ந்த
- கதையே வேறுவிதம்
- கூட்டை மறந்துவிட்டுக் - குருவி
- கும்மியடித்ததுகாண்
- வானப் பெருவெளியில் - கொட்டும்
- மழையில் குளித்ததுகாண்
- கானக் கனவுகளில் - அது
- கலந்து களித்ததுகாண்
- சொட்டும் மழைசிந்தும் - அந்தச்
- சுகத்தில் நனையாமல்
- எட்டிப் போனவனை - அது
- எண்ணி அழுதது காண்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக